பல்லடம் அருகே புதிதாக சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு: பொங்கலூர் பகுதியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், மாதப்பூரில் கோவை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு இங்கு சுங்கச்சாவடி அமைக்கப்பட்ட போது பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.அதனை தொடர்ந்து சுங்கச்சாவடி மூடப்பட்டது.
இந்த நிலையில், மூடப்பட்ட சுங்கச்சாவடி அகற்றப்பட்டு அங்கு புதிய சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. பொங்கலூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வட்டாச்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலங்களுக்கு பல்லடம் வர வேண்டிய சூழல் உள்ளது. எனவே அங்கு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால் பல்லடம் வரும் பொதுமக்கள் சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும்.
இதனால் பொதுமக்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும் என விதிமுறைகளை விதிக்கப்பட்ட நிலையில், பல்லடம் நகராட்சி பகுதிகளில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இது விதிமுறைகளை மீறி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில், சுங்கச்சாவடி அமைத்ததை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பொங்கலூர் ஒன்றியத்தில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், ஆட்டோ, கார் ஓட்டுநர், விவசாயிகள், பொதுமக்கள் என முந்நூறுக்கு மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக அமைக்கப்படும் சுங்கச்சாவடி அகற்ற வேண்டும். ஏற்கனவே கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.