துபாய்: ஐசிசியிடம் பாகிஸ்தான் அளித்த புகார் தொடர்பாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதலை கண்டித்து தீவிரவாததுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானுடன் இருநாட்டுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டோம் என்று பிசிசிஐ தெரிவித்தது. ஆனால் ஐசிசி தொடரில் மட்டும் பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது.
துபாயில் நடந்த ஆசிய கோப்பை தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வென்ற பிறகு இந்திய அணி வீரர்கள், பாக். வீரர்களுடன் கைக்குலுக்காமல் சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போட்டிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், கூறுகையில் ‘‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம்.
இந்த வெற்றியை, எல்லையில் வீரத்தைக் காட்டிய நமது ராணுவப் படைகள் அனைவருக்கும் நான் சமர்ப்பிக்க விரும்புகிறோம்’’ என்றார். சூர்யகுமார் யாதவின் கருத்துகள் விளையாட்டின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதி, அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் அளித்து உள்ளது.
இந்நிலையில், சூர்யகுமாருக்கு எதிராக பாகிஸ்தான் அளித்த புகாரை ஏற்றுக்கொண்ட ஐசிசி, முறையான விசாரணை தொடங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தெரிவித்த கருத்துகள் குறித்து ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் விளக்கம் கேட்டுள்ளார். இந்நிலையில், சூர்யகுமார் யாதவுக்கு ஐசிசி எச்சரிக்கை வழங்கி உள்ளதாகவும், அவருக்கு அபராதம் அல்லது போட்டிக்கான தடை புள்ளிகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.