Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராணுவ தளபதி, வெளியுறவு அமைச்சரை தொடர்ந்து இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்த பாக். பிரதமர்: பூதாகரமாகும் சிந்து நதிநீர் பங்கீடு விவகாரம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரைத் தொடர்ந்து, அந்நாட்டுப் பிரதமரும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவிற்குப் போர் மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, 1960ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. தொடர்ந்து, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பேசிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர், இந்தியா அணை கட்டினால், அதனை 10 ஏவுகணைகளைக் கொண்டு அழிப்போம் என எச்சரித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, சிந்து நதி மீதான இந்தியாவின் திட்டங்கள் வரலாறு மற்றும் நாகரிகத்தின் மீதான தாக்குதல் என்றும், ஒப்பந்தத்தை இந்தியா மீறினால் போரைத் தவிர வேறு வழியில்லை என்றும் மிரட்டினார்.

ராணுவத் தளபதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரின் மிரட்டல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபும் தற்போது இந்தியாவிற்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இசுலாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், ‘எங்களது நீரைத் தடுப்பதாக எதிரி (இந்தியா) அச்சுறுத்தினால், அவர்களால் ஒரு சொட்டு நீரைக்கூட எங்களிடம் இருந்து பறிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மீறி அத்தகைய முயற்சியில் ஈடுபட்டால், வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருக்கும் வகையில் மீண்டும் ஒரு பாடம் கற்பிக்கப்படும்’ என்று ஆவேசமாக கொக்கரித்தார்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்திய வெளியுறவு துறை ஏற்கெனவே பதிலடி கொடுத்துள்ளது. இதுபோன்ற மிரட்டல்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்றும், நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்காகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் என்றும் இந்தியா உறுதியாகத் தெரிவித்துள்ளது. மேலும், பயங்கரவாதக் குழுக்களுடன் ராணுவம் கைகோர்த்துச் செயல்படும் ஒரு நாட்டின் அணு ஆயுதக் கட்டுப்பாட்டுத் திறன் குறித்து உலக அளவில் உள்ள சந்தேகங்களை இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுக்கள் வலுப்படுத்துவதாகவும், இதிலிருந்து சர்வதேச சமூகம் தனது முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம் எனவும் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.