பாக். ராணுவத்தால் கொல்ல முடியாத கார்கில் போர் வீரர் தார்சின் லே கலவரத்தில் படுகொலை: மாஜி ராணுவ வீரரான தந்தை வேதனை
லே: லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், அரசியலமைப்பின் 6வது அட்டவணையை நீட்டிக்கக் கோரியும் நடந்த போராட்டத்தில் கடந்த 24ம் தேதி வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை விரட்ட போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியாகினர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக லே நகரில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், லே கலவரத்தில் பலியானவர்களில் கார்கில் போர் வீரர் சேவாங் தார்ச்சினும் (46) ஒருவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ராணுவ வீரராக இருந்து ஓய்வு பெற்ற இவர் கடந்த 1999ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கார்கில் போரில் லடாக்கில் பாதுகாப்பு பணியில் இருந்தவர். இவரது தந்தை ஸ்டான்ஜின் நம்கியாலும் முன்னாள் ராணுவ வீரர். பாகிஸ்தான் ராணுவத்தால் கூட கொல்ல முடியாத தனது மகனை உள்ளூர் போலீசார் சுட்டுக் கொன்று விட்டதாகவும், இதுதான் தேசப்பற்றாளர்களுக்கு இந்த அரசு தரும் மரியாதையா? என ஸ்டான்ஜின் வேதனை தெரிவித்துள்ளார்.