இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவ படத்தை இன்று திறக்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
தந்தை பெரியார் திருவுருவ பட திறப்பு விழா குறித்து லண்டனில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தள பதிவு:
தமிழர்களுக்கு என்னுடைய அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று (4ம் தேதி) மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் உலக புகழ்மிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நம்முடைய சுயமரியாதை தலைவர், தன்மானத் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய திருவுருவ படத்தை திறந்து வைக்க இருக்கிறேன் என்ற செய்தி உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். அதை திறந்து வைத்து, பேசுவதை எண்ணி பெருமைப்படுகிறேன், பூரிப்படைகிறேன்.
ஏனென்றால், அவர் தமிழர் தலைவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டு தலைவர் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தன்மானத்தை காத்த தலைவராக, சுயமரியாதையை காத்த தலைவராக விளங்கி கொண்டு இருக்கக்கூடியவர். அவருடைய திருவுருவ படத்தை திறந்து வைத்து பேச இருக்கிறேன் என்பதை உங்களுக்கெல்லாம் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ பட திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் உரை இன்று (5ம் தேதி) இந்திய நேரப்படி காலை 7.30 மணியளவில் ஒளிபரப்பப்படும்.