சென்னை: சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டு ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள தன் இல்லத்தில், செங்கோட்டையன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே சென்னையில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன்; யாரையும் அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை; வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு என வதந்தி பரப்புகின்றனர். மனைவி மருத்துவமனையில் இருப்பதால்தான் சென்னைக்கு சென்றேன். வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது. அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்காக பேசி வருகிறேன்.
எனக்கு அவப்பெயர் வர வேண்டும் என திட்டமிட்டு செய்கின்றனர்; இது வேதனையளிக்கிறது. யார் வதந்தி பரப்புவது என சொல்ல முடியாது; அவர்களே நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற வதந்திகளுக்கு தெளிவான பதிலை கூறி விட்டேன்; உறுப்பினர்கள் யாரையும் சந்திக்கவில்லை. எனது நோக்கம் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் என்று கூறினார்.