Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓபிஎஸ் அணியை தொடர்ந்து செங்கோட்டையன் வீட்டில் குவிந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள்: மாஜி அமைச்சர், எம்.பி., எம்எல்ஏக்கள் வாழ்த்து

கோபி: முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டில் திரண்ட ஆயிரக்கணக்கான டிடிவி தினகரன் ஆதரவாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டைனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் கடந்த 5ம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிற்கு பிறகு வெடித்தது. அதைத்தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் உள்பட 10 பேரின் கட்சி பதவி பறித்ததுடன மேலும் 2 பேரை எடப்பாடி பழனிசாமி டிஸ்மிஸ் செய்தார். இது கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, கடந்த 6 நாட்களாக ஓபிஎஸ் அணியினர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டிற்கு வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் மீண்டும் கூட்டணியில் இணைவதாக டிடிவி தினகரன் அறிவித்ததை தொடர்ந்து, கடந்த இரு நாட்களாக டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் வர தொடங்கினர். நேற்று அமமுக துணை பொதுச்செயலாளரும், மேற்கு மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை சண்முகவேல் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி, முன்னாள் எம்பி சுகுமார், முன்னாள் எம்எல்ஏ ரோகிணி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் நேற்று 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் திரண்டு செங்கோட்டையனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதே போன்று நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் ஓபிஎஸ் அணியினர் 200க்கும் மேற்பட்டோர் செங்கோட்டையனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதுவரை ஓபிஎஸ் அணியினர் மட்டுமே அதிகளவில் வந்த நிலையில் தற்போது டிடிவி தினகரன் அணியினரும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அரியலூர் மாவட்ட ஓபிஎஸ் அணி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள், கோபியில் உள்ள கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஜெ.பேரவை மாநில இணைச்செயலாளர் தண்டபாணி நிருபர்களிடம் கூறுகையில், குறுக்கு வழியில் வந்த எடப்பாடி பழனிசாமி அதிமுக இணைவதை தடுத்து வருகிறார். சுயநலத்திற்காக அதிமுகவை ஒன்றும் இல்லாமல் செய்வதற்கான பணியில் ஈடுபட்டு இருக்கிறார். செங்கோட்டையன் விரைவில் ஒற்றுமை ஏற்படும் பொறுமையாக காத்திருங்கள் என சொல்லி இருக்கிறார். அவர் ஏதாவது செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

* ஆர்.பி.உதயகுமார் மீது செங்கோட்டையன் பாய்ச்சல்

எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் நேற்று முன்தினம் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், ‘ஒற்றுமை என்ற பெயரில் அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்த சிலர் நினைப்பதாகவும், ஜெயலலிதாவின் ஆன்மா அவரை மன்னிக்காது’ என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதுகுறித்து கோபியில் செங்கோட்டையனிடம் கேட்டபோது, ‘‘அவருடைய அம்மாவே செத்து கிடக்கிறா, அதை போயி பார்க்க சொல்லுங்க’’ என்று கோபமாக பதில் கூறினார். இதைத்தொடர்ந்து மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ‘முதலில் மன்னிக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் உதயகுமார் தாயார் மறைவிற்கு என்னால் செல்ல முடியவில்லை. உதயகுமார் என்னோடு நன்றாக பழக கூடியவர், பண்பாளர். அவர் தாயை இழந்து துக்கத்தில், கண்ணீரில் மூழ்கி கொண்டிருக்கும் போது அங்கு செல்ல முடியவில்லை. ஆர்.பி.உதயகுமாரின் தாயாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்’’ என்றார்.