Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மதுரையிலிருந்து சென்னை வந்தபோது விமானத்தில் செல்போனை தவறவிட்ட ஓபிஎஸ்: உடனே கொடுக்காமல் மேலாளர் கெடுபிடி

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையிலிருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் நேற்று மாலை சென்னைக்கு வந்தார். விமானத்திலிருந்து இறங்கி காரில் அமர்ந்த பின்தான் செல்போனை காணவில்லை என தெரிந்தது. உடனே, அதை எடுத்து வாருங்கள் என்று போலீசாரிடம் கூறினார்.

போலீசார், விமான நிலைய மேலாளரிடம் சென்று தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர் இருந்த விஐபி லவுஞ்சில் செல்போன் இல்லை. இதையடுத்து விமானத்தில், தேடி பார்த்தபோது, அவர் அமர்ந்திருந்த இருக்கையில் செல்போன் இருந்தது. இதையடுத்து விமான ஊழியர்கள் அந்த செல்போனை எடுத்து, விமான நிலைய மேலாளர் அறையில் ஒப்படைத்தனர்.

ஆனால், விமான நிலைய மேலாளர், உடனடியாக அந்த செல்போனை ஓபிஎஸ்சிடம் கொடுக்க முன்வரவில்லை. விமானத்தில் தவறவிட்ட பொருட்களை, திரும்பப் பெறுவதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அதன்படிதான் கொடுக்க முடியும் என்று மேலாளர் கூறினார். இதையடுத்து போலீசார் மீண்டும் ஓபிஎஸ்சிடம் வந்து, அவர் மதுரையிலிருந்து சென்னை வந்த விமான போர்டிங் பாஸ், அவரது கையெழுத்தை வாங்கிக் கொண்டு, மீண்டும் மேலாளர் அறைக்குச் சென்றனர்.

அப்போது செல்போன் மீண்டும் வருவதற்கு சிறிது நேரம் ஆகும், எனவே நீங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள், செல்போனை உங்கள் வீட்டிற்கு கொடுத்து அனுப்பி விடுகிறோம் என்று போலீசார் கூறினர். இதையடுத்து ஓபிஎஸ் தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர் விமான நிலைய மேலாளர் அறையில், முறையான நடைமுறைகளை முடித்துக்கொண்டு, செல்போனை சுமார் ஒரு மணி நேரத்தில் ஓபிஎஸ் வீட்டிற்கு போலீசார் கொடுத்து அனுப்பினர்.