Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்.. மூன்றாம் தரப்பு தலையீட்டை இந்தியா ஏற்கவில்லை: உண்மையை போட்டுடைத்த பாக். அமைச்சர்!!

இஸ்லாமாபாத்: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போரை தாம் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிவரும் நிலையில், மூன்றாம் தரப்பு தலையீட்டை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என பாகிஸ்தான் துணை பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான இஷாக் தார் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதை எதிர்த்து, இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது மே 7ம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்'-ஐ நடத்தியது. இதையடுத்து, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த, இரு நாடுகளுக்கு இடையேயும் தாக்குதல்கள் மாறி மாறி நடந்துகொண்டிருந்தன. அதன்பின், இரு நாடுகளுக்கு இடையேயும் மே 10ம் தேதி போர் நிறுத்தம் எட்டப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடப்பது குறித்தும், பாகிஸ்தான் துணைப் பிரதமர் முகமது இஷாக் தார் பேட்டியில் கூறியதாவது; இந்தியா - பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டுவர நடுநிலையான இடத்தில் பேச்சு நடத்த அமெரிக்கா ஒரு திட்டத்தை முன்மொழிந்ததாகவும், அதை ஏற்க இந்தியா திட்டவட்டமாக மறுத்து விட்டதாகவும் அவர் கூறினார். மேலும், இந்தியாவுடனான மத்தியஸ்தம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோவிடம் பாகிஸ்தான் கேட்டுக்கொண்ட போதும் இந்தியா அதனை நிராகரித்ததாகவும்,

இது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான இருதரப்பு விவகாரம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் இந்தியாவுடன் பயங்கரவாதம், வர்த்தகம், பொருளாதாரம், ஜம்மு காஷ்மீர் என அனைத்து விவகாரங்களிலும் பேச்சுவார்த்தை தான் முன்னோக்கி செல்வதற்கான வழி என்று தாங்கள் நம்புவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தது தாம் தான் என டிரம்ப் மீண்டும், மீண்டும் கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.