Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஊட்டியில் உறைப்பனி துவங்கியது பகலில் சுட்டெரிக்கும் வெயில் இரவில் குளிரால் மக்கள் அவதி

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இறுதி வாரம் முதல் நீர் பனி விழும். தொடர்ந்து நவம்பர் மாதம் 2வது வாரத்திற்கு மேல் உறை பனி விழத்துவங்கும். இந்நிலையில், இந்தாண்டு கடந்த வாரம் வரை மழை பெய்து வந்த நிலையில், உறைப்பனி விழுவதில் தாமதம் ஏற்பட்டது.

மழை பெய்யாத நாட்களில் நீர் பனி காணப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் குளிர் அதிகமாக காணப்பட்டது. இருப்பினும் உறைபனி விழுவதில் தாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நேற்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் லேசான உறைபனி விழுந்தது. குறிப்பாக நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் லேசான உறைப்பனி விழுந்தது. ஊட்டியில் மேல்கவ்வட்டி, தலைக்குந்தா, எச்பிஎப், பைக்காரா, ஷூட்டிங் மட்டம் மற்றும் கிளன் மார்க்கென் போன்ற பகுதிகளில் லேசான உறைப்பனி விழுந்தது.

மேலும், ஊட்டி நகரில் வாகனங்களில் உறைப்பனி படர்ந்து காணப்பட்டது. தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானத்தில் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே பனி காணப்பட்டது. இதனால், வெப்பநிலை மிகவும் குறைந்தது.

நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது.இதனால், காலை நேரங்களில் கடும் குளிர் நிலவியது. தேயிலைத் தோட்டம், மலை காய்கறி தோட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் குளிரால் பாதிக்கப்பட்டனர்.

உறைப்பனி துவங்கியுள்ளதால், பனியிலிருந்து தேயிலை செடிகள் மற்றும் மலை காய்கறிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட துவங்கியுள்ளனர்.மேலும், ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா போன்ற பூங்காக்களில் உள்ள புல் தரைகள், அழகு தாவரங்கள் போன்றவை பாதிக்காமல் இருக்கவும் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.