ஊட்டி : தாவரவியல் பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில், தற்போது தொங்கும் மலர் தொட்டிகளை கொண்டு புல் மைதானங்களில் உள்ள மரங்களில் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர்.
அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான மலர் செடிகள், மூலிகைச் செடிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், அங்குள்ள புல் மைதானங்களில் ஓடியாடி விளையாடியும் மகிழ்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் பார்வைக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் முதல் மற்றும் இரண்டாவது சீசனின் போது அதிக அளவு மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக் காணப்படும்.
இவ்விரு சீசன்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் மலர்கள் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புவது வாடிக்கை. இதனால், பூங்காவிற்கு வருவதற்கு எல்லா பயணிகள் மகிழ்விக்க எப்போதும் கண்ணாடி மாளிகையில் பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்.
முதல் சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் உள்ள பாத்திகளில் இருந்து இந்த மலர் செடிகள் அகற்றப்பட்டு தற்போது விதைப்பு பணிகளுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனால், பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில் கண்ணாடி மாளிகையில் உள்ள மலர் அலங்காரங்களை கொண்டு மட்டும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
இந்த கண்ணாடி மாளிகையில் மலர் தொட்டிகளை கொண்டு அடிக்கி வைக்கப்பட்டுள்ள மலர் கோபுரம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதன் அருகே நின்று சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். இது தவிர முதல்முறையாக பூங்காவில் உள்ள அனைத்து மரங்களிலும் தொங்கும் மலர் தொட்டிகளை கொண்டு பல்வேறு மலர் செடிகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.
பல வண்ணங்களில் காணப்படும் இந்த மலர் தொட்டிகள் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்வது மட்டுமின்றி இதனை கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், புல்வெளி மைதானங்களுக்கு இடையே உள்ள மரங்களில் தற்போது தொங்கிக் கொண்டிருக்கும் இந்த மலர் தொட்டிகள் அழகாக காட்சியளிக்கிறது. இது அனைவரையும் கவர்ந்துள்ளது.


