ஆன்லைன் டிரேடிங் தளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி, ரூ.22.3 கோடிமோசடி: ஒருவர் கைது
சென்னை: சென்னை, இராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் ஸ்வேதரன்யன், வ/76 என்பவர் மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் டிரேடிங் தளத்தில் முதலீடு செய்தபோது, போலியான ஆன்லைன் டிரேடிங் தளம் மூலம் மொத்தம் ₹22.30 கோடி மோசடி செய்யப்பட்டதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 03.06.2025 அன்று கொடுத்த புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி.A.ராதிகா, இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் துணை ஆணையாளர் அறிவுரையின்பேரில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில், மேற்படி புகார்தாரரின் தொகையில் சுமார் ரூ.1.4 கோடி அகமதாபாத் நகரில் உள்ள பந்தன் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தக் கணக்கு, M/s Shree Umiya Water Purification என்ற போலி நிறுவனத்தின் பெயரில், குற்றவாளி போலியான கே.ஒய்.சி ஆவணங்களை பயன்படுத்தி திறந்ததுள்ளதும், 2025 மார்ச் - ஏப்ரல் மாதங்களில், அந்தக் கணக்கில் ரூ.3 கோடிக்கும் மேல் வரவு வைக்கப்பட்டு, பெரும்பகுதி பணமும் திரும்பப் பெறப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
அதன்பேரில், சைபர்கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 03.09.2025 அன்று அகமதாபாத் சென்று, மேற்படி குற்ற சம்பவத்தில் தொடர்புடைய எதிரி படேல் ஜே, வ/28, த/பெ.கம்லேஷ்பாய், பாபுநகர், அகமதாபாத், குஜராத் மாநிலம் என்பவரை 05.09.2025 அன்று கைது செய்து, அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நேற்று (09.09.2025) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். கைது செய்யப்பட்ட எதிரியிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய OPPO A5 Pro 5G மொபைல் போன் மற்றும் இரண்டு சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில், எதிரி படேல் ஜே மீது தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி, கோவா, பஞ்சாப், ஆந்திர பிரதேசம், உத்திர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 31 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதும், எதிரி படேல் ஜே மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து போலி முதலீட்டு செயலிகள், இணையதளங்கள், சமூக ஊடக விளம்பரங்கள் (Facebook, Instagram, YouTube போன்றவை) மூலம் பொதுமக்களை ஏமாற்றி, விரைவில் அதிக லாபம் கிடைக்கும் என்ற பேராசையை தூண்டி, பெரிய அளவில் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்தது.
எனவே இணையதளங்கள் மூலம் முதலீடு செய்யும் போதும் அவற்றை பார்வையிடும் போதும் அதில் குறிப்பிட்டுள்ள விபரங்களை உண்மை என்று நம்பிக்கொண்டு தங்களது பணத்தை யாரிடமும் அனுப்பவேண்டாம். மேலும் நேரில் பார்க்காமலும் தீர விசாரிக்காமலும் எக்காரணத்தைக் கொண்டும் அந்நிய நபர்களிடம் பணம் எதுவும் கொடுக்கவோ அல்லது இணையவழியாகவோ செலுத்த வேண்டாம் என்றும் அதிகப்படியான கமிஷன் என்று ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறக்கூடாது என்றும், சைபர் குற்றங்களை 1930 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், www.cybercrime.gov.in என்ற இணையதள வாயிலாகவும் மற்றும் அருகிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.