ஆன்லைன் மூலமாக விண்ணபித்த அன்றே விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: ஆன்லைன் மூலமாக விண்ணபித்த அன்றே விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்க கூடிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரியில் தொடங்கிவைத்தார். 2 நாள் பயணமாக சேலம், தருமபுரி மாவட்டங்களுக்கு வந்துள்ள முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அதில் ஒரு நிகழ்வாக தமிழகத்திலேயே முதன் முறையாக இ-கிஷான் கிரெடிட் கார்டு மூலமாக விவசாய கடன் வழங்க கூடிய திட்டத்தை தருமபுரி அடுத்துள்ள அதியமான் கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தொடங்கி வைத்துள்ளார்.
முதல் முயற்சியாக தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டமானது படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இருக்க கூடிய 136 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் 21 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் இந்த திட்டமானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
வழக்கமாக விவசாயிகளுக்கு பயிர்கடன் பெறுவதற்கு ஆவணங்களுடன் கூட்டுறவு வங்கிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது, ஆவணத்தை பரிசீலித்து கடன் வழங்க சுமார் 7 நாட்கள் வரை ஆகும். அந்த கால தாமதத்தை தவிற்க்க முன்னோடி திட்டமாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இ-சேவை மையங்கள், அல்லது வீட்டில் இருந்தபடியே விவசாயிகள் நேரடியாக விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பிக்கும் பொது அதே தினத்தில் அதிகாரிகள் உடனடியாக ஆவணங்களை பரிசீலித்து உடனடியாக பயிர்கடன் வழங்கப்படவுள்ளது.
அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை இந்த பயிர்கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.