ஒரு மாதம் சண்டை நிறுத்தம் செய்கிறோம்; அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம்: ஒன்றிய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்
புதுடெல்லி: சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாட்டில் இருந்து மாவோயிஸ்ட்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார். அதன்படி, மாவோயிஸ்ட் ஒழிப்பு பணிகளில் உள்ளூர் போலீசார், கோப்ரா கமாண்டோக்கள், சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட மத்திய மாவோயிஸ்ட் செய்தி தொடர்பாளர் அப்ஹே என்பவர், ஒன்றிய அரசுக்கு கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளார். தற்போது, அந்த கடிதம் ஊடகங்களில் வெளியாகி உள்ளது. கடிதத்தில், ‘எங்கள் ஆயுத போராட்டத்தை ஒரு மாத காலம் நிறுத்தி வைக்கிறோம். இந்த கால கட்டத்தில் அரசு நியமிக்கும் குழுவினருடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம். மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட் தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இந்த கால கட்டத்தில் போலீசார் தொந்தரவு செய்ய கூடாது. என்கவுன்ட்டர் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். அத்துடன் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். இந்த பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக நடக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கடிதத்துக்கு பதிலளிக்க வசதியாக இ-மெயில் முகவரியையும் அப்ஹே கொடுத்துள்ளார்.
இதுபற்றி சட்டீஸ்கர் அதிகாரிகள் கூறுகையில், ‘மாவோயிஸ்ட்கள் பலர் கொல்லப்பட்டதால் அந்த அமைப்பு தற்போது வலுவிழந்துள்ளது. எனவே, மாவோயிஸ்ட் அமைப்பினரை மீண்டும் ஒன்று கூட்டுவதற்கும் சதி தீட்டுவதற்கும் வசதியாக அமைதி பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகமாடுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தவிர அமைதி பேச்சுவார்த்தை கடிதம் உண்மையாக இருந்தால், மிகப்பெரிய மாற்றம் நிகழும்’ என்றார்.
ஒன்றிய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘மாவோயிஸ்ட்கள் அமைதி பேச்சுக்கு முன்வருவது வரவேற்கத்தக்கது. இதில், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக சேவகர்களை மத்தியஸ்தர்களாக பயன்படுத்தலாம். எனினும், 2026 மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் மாவோயிஸ்ட்கள், நக்சல்கள் ஒழிக்கப்படுவார்கள் என்று ஒன்றிய அரசு அளித்துள்ள உறுதிமொழியில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றனர்.