அலற வைக்கும் ஆம்னி பேருந்து டிக்கெட் உயர்வு: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 3 மடங்கு கட்டணம் அதிகரிப்பு
* விமான கட்டணத்தை மிஞ்சியதால் பயணிகள் அதிர்ச்சி
* குடும்பத்துடன் செல்ல ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது
சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல 3 மடங்கு கட்டணம் அதிகரித்துள்ளதாகவும், விமானத்தை விட ஆம்னி பஸ் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தாண்டு தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் பேருந்து, ரயில்கள், விமானங்களில் செல்ல தயாராகி வருகின்றனர்.தீபாவளிக்கு ரயிலில் சொந்த ஊருக்கு செல்ல முடியாதவர்கள், அரசு பேருந்து மூலம் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல TNSTC இணையதளம் மற்றும் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்ற நிலையில், முன்பதிவுகள் முடிவடையும் நிலையில் உள்ளது.
இந்த சூழ்நிலையை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். கடைசி நேரத்தில் இந்த ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை கேட்டால் தலையே சுற்றும் அளவுக்கு டிக்கெட் விலை தாறுமாறாக உயர்த்தி கேட்கின்றனர். காரணம், டிக்கெட்டின் விலையை பல ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொள்ளை அடிக்க தொடங்கி விடுகின்றனர். தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை (20ம்தேதி) வருவதால், வெள்ளிக்கிழமை அன்று ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று திட்டமிட்டிருந்த பயணிகளுக்கு, கட்டணம் 3 மடங்கிற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மக்களின் இந்த இக்கட்டான சூழ்நிலையை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதால், பயணிகளின் பாக்கெட் காலியாகிறது.
உதாரணமாக, சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வழக்கமாக ரூ.800 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகள் அனைத்தும் குறைந்தபட்சம் ரூ.2400 முதல் ரூ.5500 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடைசி நேர ஆம்னி பேருந்து கட்டணங்களை பார்த்தால், சாதாரண நாட்களில் விமான டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை விட அதிகமாக உள்ளது. அந்த அளவுக்கு ஆம்னி பேருந்து கட்டணங்கள் கேள்வி கேட்பார் இன்றி இஷ்டத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அரசு தரப்பில் எத்தனை முறை எச்சரிக்கை மணி அடித்தாலும் கட்டணத்தை குறைக்காமல் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி வாங்குகின்றனர். சென்னை மாநகரில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. சராசரியாக பேருந்து கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டணம் விமானக் கட்டணத்தை விட அதிகமாக உள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதாவது, குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைக்கு ரூ.1400 முதல் ரூ.1800 வரை வசூலிக்கிறார்கள். தென் மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கும் பிற பகுதிகளில் இயக்கக்கூடிய ஆம்னி பஸ்களிலும் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எத்தனை முறை அரசு எச்சரித்தாலும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதில் உறுதியாக உள்ளனர். சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ஏ.சி. இருக்கைக்கு ரூ.600 முதல் ரூ.900 வசூலிக்கப்படும். ஆனால் இப்போது ரூ.2000 முதல் ரூ.3000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட ஆம்னி பேருந்தில் இந்த கட்டணம் ரூ.3989 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைக்கு ரூ.1400 முதல் ரூ.1800 வரை வசூலிக்கிறார்கள். ஏ.சி. படுக்கை வசதிக்கு மதுரைக்கு ரூ.2000 முதல் ரூ.3200 வரை வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.2000 முதல் கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஏ.சி. படுக்கை வசதி கட்டணம் ரூ.3500. ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.2,700 கட்டணம் தற்போது நிர்ணயித்து உள்ளனர். இதேபோல நாகர்கோவிலுக்கு குளிர்சாதன வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.2460 கட்டணம் அதிகபட்சமாக வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.3363 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் தீபாவளி நெருங்கும் நேரத்தில் இன்னும் அதன் தேவையை பொறுத்து உயர்த்திக் கொள்வார்கள்.
அதிக கட்டணம் வசூலிப்பதால் நடுத்தர மக்கள் குடும்பமாக பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக இதுபோன்ற கட்டண கொள்ளையில் ஆம்னி பேருந்துகள் ஈடுபடும் போது, தமிழக அரசு தலையிட்டு கடிவாளம் போடுவதற்கான நடவடிக்கை எடுப்பார்கள். இதனால் ஓரளவு கட்டண கொள்ளையை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது. ஆனால் இந்த ஆண்டு தனியார் ஆம்னி பேருந்து ஆபரேட்டர்கள் வெளிப்படையாக தங்களது இணையதளத்தில் கூடுதல் கட்டணத்தை அறிவித்து முன்பதிவு செய்கிறார்கள். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கட்டண கொள்ளையில் இருந்து பாவப்பட்ட பயணிகளை காப்பாற்ற முடியும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே உடனடியாக தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளைக்கு முடிவுரை எழுத வேண்டும் என்பது பயணிகளின் வலுவான கோரிக்கையாக உள்ளது.
இதுதொடர்பாக தீபாவளிக்கு அதிக விலைக்கு டிக்கெட் முன்பதிவு செய்த பயணி ஒருவர் கூறியதாவது: தீபாவளி பண்டிகை வரும் நிலையில் ஒருவர் மட்டும் பயணம் செய்தால் சரி. ஒரு குடும்பத்தில் 3 அல்லது 4 பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சுமார் 10 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட சென்று வருவதற்கு மட்டுமே 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அரசே பேருந்து கட்டணத்தை தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அரசு தரப்பில் எத்தனை முறை எச்சரிக்கை மணி அடித்தாலும் கட்டணத்தை குறைக்காமல் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி வாங்குகின்றனர்.