Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

போதை ஆசாமிகள் தகராறில் சாலையில் நடந்து சென்ற முதியவர் வெட்டி கொலை

மாதவரம்: மாதவரம் பர்மா காலனியை சேர்ந்த நண்பர்களான பாக்யராஜ் (27), மார்ட்டின் (28), சந்தானம் (26) ஆகிய மூவரும், நேற்று முன்தினம் இரவு, அருள் நகர் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த கொடுங்கையூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜெரோம் (26) என்பவர் மீது இவர்களது பைக் மோதியது. இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்ததால், கலைந்து சென்றனர். பின்னர் டாஸ்மாக் பாரில், பாக்யராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு டேபிளில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.

இவர்களுக்கு அருகில் ஜெரோம் மற்றொரு டேபிளில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். போதையில், இருதரப்புக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஜெரோம் மறைத்து வைத்திருந்த அரிவாளால், பாக்கியராஜ் உள்ளிட்ட மூவரையும் வெட்டியுள்ளார். இதனால், அவர்கள் பாரில் இருந்து வெளியே ஓடினர். அவர்களை விடாமல் ஜெரோம் விரட்டிச் சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக சென்ற ஆட்டோவை மடக்கி, மூவரும் தப்பினர். இதனால், ஆத்திரமடைந்த ஜெரோம், அவ்வழியாக நடந்து சென்ற ரமேஷ் (60) என்பவரை திடீரென வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார்.

தகவலறிந்து வந்த மாதவரம் போலீசார், படுகாயமடைந்த ரமேஷை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜெரோமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.