ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அருகே நாய் கடித்து சிகிச்சை பெற்று வந்த கூலி தொழிலாளி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (45). கூலி‘ த்தொழிலாளி. இவரது மனைவி சுதா (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 8ம் தேதி கருணாநிதி, வெளியே சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தெரு நாய் ஒன்று அவரை கடித்துள்ளது. அதற்கு சிகிச்சை பெறவில்லையாம்.
கடந்த 21ம் தேதி கருணாநிதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு நாய் கடித்த இடத்தில் வலி அதிகமாக இருந்ததால் குடும்பத்தினர் அவரை கடந்த 18ம்தேதி அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு ரேபிஸ் நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் அவரை வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், நாய் கடித்ததால் உடனடியாக சிகிச்சை பெறாததால் அவருக்கு ‘ரேபிஸ்’ நோய் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இதைத்தொடர்ந்து அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கருணாநிதி நள்ளிரவு 12 மணியளவில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பாக வேப்பங்குப்பம் போலீசில் சுதா இன்று புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.