Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2வது மகளிர் ஓடிஐயில் இன்று வெற்றி மிடுக்குடன் ஆஸ்திரேலியா வெல்லும் முனைப்புடன் இந்தியா

முல்லன்பூர்: இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியுடனான 2வது ஒரு நாள் போட்டி இன்று, பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. ஆலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலியாவுடனான முதல் போட்டியில் மோசமான தோல்வியை தழுவியபோதும், 2வது போட்டியில் அசத்தலாக வென்று, தொடரை சமன் செய்யும் வல்லமையுடன் இந்திய மகளிர் அணி திகழ்கிறது.

முதல் போட்டியில் ஹர்மன்பிரித் கவுர் தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாகவே ஆடியிருந்தது. பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல் ஆகியோர் அரை சதங்கள் விளாசி கணிசமான ஸ்கோராக 281 ரன் அடித்திருந்தனர். ஆனால், மோசமான பீல்டிங் காரணமாக முதல் போட்டியை கோட்டை விட வேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. இந்திய வீராங்கனைகள் பிடிக்காமல் விட்ட 4 கேட்சுகள் போட்டியின் திருப்பு முனையாக அமைந்தன என்றே சொல்லலாம்.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்களில் ஸ்நேஹ் ராணாவை தவிர மற்ற வீராங்கனைகள் சிறப்பாக செயல்படாதது, இந்திய அணியின் தோல்விக்கு மற்றுமொரு காரணமாக அமைந்தது. மேலும், ஆஸ்திரேலியா வீராங்கனைகள் பேட்டிங்கில் அசாத்திய திறனை வெளிப்படுத்தி வெற்றியை உறுதி செய்தனர். இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்கள் தவறுகளை திருத்தி, வெற்றியை நோக்கி பயணிப்பர் என கருதலாம். அதேசமயம், ஆஸி வீராங்கனைகள் இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டுவர். அதனால், இன்றைய போட்டி இரு தரப்புக்கும் கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.