மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூரில் நாம் தமிழர் கட்சி சார்பில், ‘தீரனும் அவன் பேரனும்’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ‘நாம் தமிழர் கட்சி, தமிழக தேர்தலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது. எனினும் கூட்டணி சேராமல் தொடர்ந்து தனித்து போட்டியிடுவோம். வெற்றி பெறுவது நோக்கமல்ல. தொடர்ந்து போராடுவதே எங்கள் நோக்கம். எங்கள் கட்சி வெற்றி பெற்றால், கோவையில் கட்டப்பட்ட புது மேம்பாலத்துக்கு சூட்டியுள்ள ஜி.டி.நாயுடு பெயரை மாற்றி, தீரன் சின்னமலை பெயரை சூட்டுவோம்,’ என்றார்.
இக்கூட்டத்தில், 2026 சட்டசபை தேர்தலில், சேலம் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை அறிவித்து, அவர்களை அறிமுகப்படுத்தினார். அப்போது, மேட்டூரில் வீரப்பனின் மகள் வித்யாராணி, சங்ககிரியில் நித்யா, வீரபாண்டியில் ராஜேஷ்குமார், சேலம் மேற்கில் சுரேஷ்குமார், கெங்கவல்லியில் அபிராமி, ஆத்தூரில் மோனிஷா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றார்.