Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு விழிப்புணர்வோடு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், முந்தைய ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்திய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்றும் அவர் துறைவாரியாக அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கடந்த கன மழையின் போது கிடைத்த கள அனுபவங்களை மையமாக வைத்து, மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருப்பதற்கான திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.குறிப்பாக நீர்வளத்துறை ஒருபுறமும், சென்னை மாநகராட்சி மறுபுறமும், இந்த பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. மழைநீர் தேங்குவதை தவிர்க்க சென்னையின் 18 சுரங்கப்பாதைகளில் சுமார் ரூ.15 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தவிர நீர்வளத்துறை சார்பில், வெள்ளத்தடுப்பிற்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் 12 பணிகள் ரூ.338 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. பக்கிங்காம் கால்வாயில் சேரும் கீழ்கட்டளை வடிகால் 1 மற்றும் 2-ல் ரூ.60 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை மழைக்காலத்துக்குள் செய்ய வேண்டியது மிக, மிக அவசியம். மின்சார லைன்கள், மின்சார பாக்ஸ், போன்றவற்றை உரிய முறையில் பராமரிப்பதை மின்சாரத்துறை உறுதி செய்ய வேண்டும்.

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள், பேரிடர் மீட்பு பணிகளின் போது, ஒவ்வொரு துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளை விட இந்தாண்டு நாம் இன்னும் அதிக விழிப்புணர்வோடும், அதிக எச்சரிக்கையோடும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் முருகானந்தம், துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனுக்களுக்கு துணை முதல்வர் தீர்வு

பெருநகர சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக கடந்த மாதம் 15ம் தேதி முதல் வரும் 14ம் தேதி வரை “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் 109 முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகின்றன. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி பாரதியார் இல்லம், ராயபுரம் மண்டலம் செல்லப்பிள்ளையார் கோயில் தெரு எம்.எஸ்.மஹால் ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற முகாம்களை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களுடன் கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கினார்.