Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வடகிழக்கு பருவமழை நெருங்கிய நிலையில் சாலையோர கால்வாய்களை தூர்வாரும் பணி துவங்கியது

ஊட்டி : வடகிழக்கு பருவமழை நெருங்கிய நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் சாலையோர கால்வாய்கள், சிறு பாலங்களில் தூர்வாரும் பணிகள் மாவட்டம் முழுவதும் துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இருமாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் மண் சரிவுகள் மற்றும் மரங்கள் விழுந்து பாதிப்புகள் ஏற்படும்.

அதேபோல், சாலையோரங்களில் உள்ள தடுப்பு சுவர்கள் இடிந்து விழுவது மற்றும் மண்அரிப்பு போன்றவைகள் ஏற்பட்டு சாலைகள் பாதிக்கும். இதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சாலையோரங்களில் உள்ள சிறுபாலங்கள் மற்றும் மழைநீர் கால்வாய்களில் தூர் வாரப்படும்.

இதன் மூலம் கன மழை பெய்தாலும், மழை நீர் கால்வாய்கள் மற்றும் சிறுபாங்கள் மூலம் ஓடிவிடும். சாலை பாதிக்காது. அதேபோல், அக்கடோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும்.

இச்சமயங்களில் கனமழை பெய்யும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் பெரிய அளவிலான நிலச்சரிவுகள், சாலை துண்டிப்பு ஏற்படுதல் மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். இதனால், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் அனைத்து பகுதிகளிலும் உள்ள மழைநீர் கால்வாய்கள், சிறுபாலங்கள் தூர்வாரப்பட்டு, மழைநீர் தங்கு தடையின்றி ஓட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்வது வாடிக்கை.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்கள் ஆகியவைகளை தூர்வார வேண்டும் என தமிழகஅரசு நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நெடுஞ்சாலைகள், கிராமப்புற சாலையோரங்களில் இருந்த மழைநீர் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள், குறிப்பாக, ஊட்டி- கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகள் அனைத்திலும் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி ஆகிய நான்கு உட்கோட்டங்களில் உள்ள சாலையோர கால்வாய்கள், சிறு பாலங்கள், பாலங்கள், குழாய் பாலங்கள் ஆகியவை தூர் வாரப்பட்டுள்ளது. தொடர்ந்து, தூர்வாரும் பணிகள் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலையோரங்களில் உள்ள மழைநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது, என்றார்.