Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அக்.22 முதல் இன்று வரை மொத்தமாக 4 லட்சத்து 9,650 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது: சென்னை மாநகராட்சி தகவல்!

சென்னை: அக்.22 முதல் இன்று வரை மொத்தமாக 4 லட்சத்து 9,650 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழையால் மக்கள் வாழும் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், மக்கள் அச்சமின்றி தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட உதவும் வகையிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறார்.

இந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில் 17.10.2025 அன்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8 மணி வரை சராசரியாக 221 . 80 மி.மீ. மழை பெய்துள்ளது. 26.10.2025 காலை 8.30 மணி முதல் இன்று (27.10.2025) காலை 8 மணி வரை சராசரியாக 2.51 மி.மீ. மழை பெய்துள்ளது. இதில், அதிகபட்சமாக திருவொற்றியூர் மண்டலம் எண்ணூர் பகுதியில் 4 . 50 மி.மீ. மழை பெய்துள்ளது.

மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை அளித்திடும் நோக்கில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக, 17.10.2025 அன்று முதல் 25.10.2025 வரை 408 நிலையான மருத்துவ முகாம்கள், 166 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 574 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 24,146 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு தொடர்ந்து செயல்படுகின்றன. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 106 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு 22.10.2025 முதல் 27.10.2025 வரை மொத்தம் 4 லட்சத்து 9 ஆயிரத்து 650 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 2,000-க்கு மேற்பட்ட மோட்டார் பம்புகள் ஆங்காங்கே தயார் நிலையில் உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுவதற்காக 457 மர அறுவை இயந்திரங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு மழை வெள்ளம் காரணமாக ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், 150 இணைப்புகளுடன் கூடிய 1913 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்குப் புகார்கள் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார்கள் மூலமும் சமூக ஊடகங்களில் வரும் புகார் மீதும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. வடகிழக்குப் பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அகற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேரும் சென்னை குடிநீர் வாரியம் 2,149 களப்பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு 454 குடிநீர் வாகனங்கள் மூலம் 15.10.2025 முதல் குடிநீர் வழங்கப்படுகிறது. 26.10.2025 அன்று மட்டும் 2828 நடைகள் வாயிலாக தடையில்லாமல் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.