சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆண்டு மழைப்பொழிவில் அதிக மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் பெறுகிறது. அந்தவகையில் அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கும் பருவமழை டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பாக 44 செ.மீ. மழை பதிவாகும். கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரையில் முறையே 33.7 செ.மீ., 45.4 செ.மீ., 47.7 செ.மீ., 71.4 செ.மீ., 44.5 செ.மீ., 45.8 செ.மீ., 58.9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதாவது, 2018-ம் ஆண்டைத் தவிர மற்ற ஆண்டுகளில் இயல்பைவிட அதிகமாகவே மழை பெய்துள்ளது. நடப்பாண்டு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்க உள்ள நிலையில், எந்த அளவு மழை இருக்கும் என்ற வானிலை முன்கணிப்பை தனியார் வானிலை ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
தாழ்வுப்பகுதி, மண்டலம், புயல் என அடுத்தடுத்த நிகழ்வுகளால் மழை தரும் ஆண்டாக இந்தாண்டு அமையும் என்றும், வடகிழக்கு பருவமழை காலத்தில் குறிப்பாக நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீடித்து மழையை கொடுப்பதற்கும், குளிர்காலமான ஜனவரி, பிப்ரவரியில் இயல்புக்கு அதிக மழை பதிவாவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவும் சொல்லப்பட்டுள்ளது.