கவுகாத்தி: மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட்டில் நேற்று, வங்கதேசத்தை நியூசிலாந்து அணி, 100 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கவுகாத்தியில் நேற்று நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஒரு நாள் தொடரின் 11வது போட்டியில், நியூசிலாந்து - வங்கதேசம் மகளிர் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து துவக்க வீராங்கனைகள் சுஸி பேட்ஸ் 29, ஜார்ஜியா பிளிமர் 4 ரன்னில் ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்த அமெலியா கெர் 1 ரன்னில் அவுட்டானார். இருப்பினும், கேப்டன் சோபி டிவைன் (63 ரன்), புரூக் ஹேலிடே (69 ரன்), அற்புதமாக ஆடி 4வது விக்கெட்டுக்கு 112 ரன் குவித்தனர்.
பின் வந்தோர் சொதப்பியதால், மீண்டும் விக்கெட்டுகள் சரிய, 50 ஓவர் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன் எடுத்தது. அதன் பின், 228 ரன் இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. நியூசி அணியின் ஜெஸ் கெர், லீ டஹுலு, ரோஸ் மேரி ஆகியோரின் மந்திரப் பந்துகளில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ரூப்யா ஹைதர் 4, ஷர்மின் அக்தர் 3, ஷோபனா மோஸ்தாரி 2, கேப்டன் நிகார் சுல்தானா 4, சுமையா அக்தர் 1, ஷோர்னா அக்தர் 1 என ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. 39.5 ஓவரில் வங்கதேசம் 127 ரன் மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது. அதனால், நியூசி. 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.