புதுடெல்லி: மக்களவைக்கு தேர்தல் நடந்து வரும் நிலையில் வரும் ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் டெல்லிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லிக்கு வரும் எம்பிக்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை மக்களவை செயலகம் செய்து வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே உள்ள பகுதிகளை மேம்படுத்தும் பணி இன்னும் முடிவடையவில்லை. புதிய எம்பிக்களை வரவேற்கும் ஏற்பாடுகளை மக்களவை செயலக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில்,‘‘ தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தன்று மாலையில் எம்பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வருவார்கள். எம்பிக்கள் வசதிக்காக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய செல் போன் இணைப்பு, நாடாளுமன்றத்துக்குள் செல்வதற்கு ஸ்மார்ட் கார்டுகள் போன்றவற்றுக்கான விண்ணப்ப படிவங்கள் சிறப்பு மையங்களில் வழங்கப்படும். அதே போல் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் எம்பிக்களை வரவேற்க வரவேற்பு மையம் அமைக்கப்படும். அங்கிருந்து நாடாளுமன்ற வளாகத்துக்கு அவர்கள் அழைத்து வரப்படுவார்கள். பதவி ஓய்வு பெறும் எம்பி.க்கள் அவர்கள் தங்கியிருக்கும் வீடுகளை காலி செய்ய கால அவகாசம் கொடுக்கப்படும். பின்னர் அந்த வீடுகள் புதிய எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்படும்’’ என்றனர்.