புதுடெல்லி: கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் 2011 டிசம்பரில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையத்தை கலைத்தும் , முகாந்திரம் இருந்தால் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும், கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, நிலுவையில் உள்ள வழக்கில் தன்னையும் மனுதாரராக இணைக்கக் கோரி முன்னாள் அதிமுக எம்பி ஜெயவர்த்தன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.