8 நுழைவாயில்
60 செக்கிங் கவுன்டர்கள்
9 ரிமோட் போர்டிங் கேட் தயாராகிறது
சென்னை: சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினலில் 8 நுழை வாயில்கள், 60 செக்கிங் கவுன்டர்கள், 10 எக்ஸ்ரே ஸ்கேனர்கள், 9 ரிமோட் போர்டிங் கேட்கள் என்று பிரமாண்டமாக தயாராகிறது. இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகள் ரூ.1,207 கோடி மதிப்பீட்டில் நடக்கிறது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதோடு சரக்கு விமானங்கள், தனி விமானங்கள் போக்குவரத்தும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சென்னை விமான நிலையத்தில் கடந்த 2015 ம் ஆண்டு, பயணிகள் எண்ணிக்கை 2.2 கோடியாக இருந்தது. அது படிப்படியாக அதிகரித்து, இப்போது 2025ல் 3 கோடியை கடந்து கொண்டு இருக்கிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு எடுத்து, ஒன்றிய அரசின் அனுமதியை கடந்த 2017ம் ஆண்டு கோரியது. ஒன்றிய அரசும் அதற்கான அனுமதியை அளித்ததோடு, சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மூலம் நிதியும் ஒதுக்கியது. அதன்படி சென்னை விமான நிலையத்தை ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் விரிவுபடுத்துவது என்றும், இப்பணிகளை 2 கட்டங்களாக, பேஸ் 1, பேஸ் 2 என்று கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி முதல் பேஸ் 1.49 லட்சம் சதுர மீட்டரில் ரூ.1,260 கோடியிலும், பேஸ் 2, 86,135 சதுர மீட்டரில், 1,207 கோடியில் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
இதை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த, அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய விமான நிலைய கட்டிடத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டினார். இதில் முதல் பேஸ் பணிகள் 36 மாதங்களில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு, ஊரடங்கு உள்பட பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாக நடந்து கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பிரதமர் மோடி புதிய ஒருங்கிணைந்த முனையத்தை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே சர்வதேச முனையமாக செயல்பட்டுக் கொண்டிருந்த டெர்மினல் 3, கட்டிடங்கள் இடிக்கப்படும் பணிகள் தொடங்கின. அப்பணிகள் நிறைவடைந்தத பின்பு, பேஸ் 2 கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கின்றன. இந்த இரண்டாம் கட்ட பணிகள் இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து, புதிய டெர்மினல் வருகிற 2026 ஜூன் மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பணிகள் காலதாமதம் ஆவதால் 2026ம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது.



