Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

அந்தமான் அருகே வங்க கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே நாளை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், அதன் தொடர்ச்சியாக 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளதை அடுத்து, அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.

இந்நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இன்று உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து 24ம் தேதியில் வங்கக் கடலின் மத்திய பகுதிக்கு நெருங்கி வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அது தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வரும் என்பதால், தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். அதனால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநிலை 25ம் தேதி வரை நீடிக்கும். மேலும் சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். மேலும், தெற்கு அந்தமான் கடல பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும். நாளையும் இதேநிலை நீடிக்கும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.