டெல்லி: புதிய தேசிய கல்வி கொள்கை மற்றும் அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பிஎம்சி பள்ளிகள் திட்டதை ஏற்ற அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த நிதியாண்டில் ரூ.34,458 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் இருப்பதை ஒன்றிய அரசு எழுத்து பூர்வமாக மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்று திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார் மக்களவையில் எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். சமக்ர சிக்ஷாவின் அபியான் திட்டத்தின் கீழ் எந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற கேள்வியும் கேட்டு இருந்தார்.
இதற்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ள ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம், கடந்த 2018ஆம் ஆண்டு முதலே சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்தை அமல்படுத்தி வருவதாக விளக்கம் அளித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டம், ஆசிரியர் பயிற்சி கல்வி, தொடக்கக்கல்வி, மேல்நிலைக் கல்வி ஆகிய அனைத்துக்கும் ஒதுக்கப்பட்ட வந்த நிதிகள் சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்தின் கீழ் வந்துவிட்டதாக ஒன்றிய கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 2024 - 2025 நிதியாண்டில் பீகாருக்கு ரூ.4,217 கோடியும், குஜராத்துக்கு ரூ.1,245 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ. 3,090 கோடியும், அதிகபட்சமாக உத்தரப்பிரதேசதுக்கு ரூ.6,264 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.
அதாவது 2024 - 2025 நிதியாண்டில் கல்வி நிதியாக ரூ.34,458 கோடி விடுவிக்கப்பட்ட போதிலும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட விடுவிக்கப்படாததை ஒன்றிய அரசு உறுதி செய்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் நவோதாய பள்ளிகளில் தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை என்ற போதும், சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்தின் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு வந்தது. தற்போது புதிய தேசிய கல்வி கொள்கை ஏற்க மறுக்கும் தமிழ்நாடு புதிய கல்வி கொள்கை அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதும், இந்தியை கட்டாயமாகும் திட்டமுமான பிஎம்சி பள்ளி திட்டத்திலும் கையெழுத்திடவில்லை. இதே நிலைப்பாட்டில் உள்ள கேரளா மற்றும் மேற்கு வங்கத்திற்கும் ஒரு ரூபாய் கூட கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.