Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நேபாளத்தில் மழை,வெள்ளம் நிலச்சரிவில் 51 பேர் பரிதாப பலி

காத்மாண்டு: நேபாளத்தில்கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இடை விடாது பெய்யும் கனமழையால் மொத்தம் உள்ள 7 மாகாணங்களில் கோசி,மாதேஸ்,பாக்மதி,கந்தகி மற்றும் லும்பினி ஆகிய 5 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையால் பாக்மதி, கிழக்கு ரப்தி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. நேற்றுமுன்தினம் இரவு முதல் கிழக்கு நேபாளத்தில் கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

நேபாளத்தின் கிழக்கே இந்திய எல்லையை ஒட்டிய பகுதியான இலாம் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர்என்று தேசிய பேரிடர் மீட்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது. தெற்கு நேபாளத்தில் மின்னல் தாக்கியும், உதய்ப்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் மாயமாகி உள்ளனர்.

மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம்,போலீசார் மற்றும் ஆயுத படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்காக நேபாள ராணுவம் ஹெலிகாப்டரை அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை ராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து இருக்கின்றனர்.

இமயமலையையொட்டிய கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் பலர் மண்ணில் புதையுண்டதாக அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

* நேபாளத்துக்கு உதவி மோடி உறுதி

மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.