புதுடெல்லி: நேபாள பிரதமர் சுசீலா கார்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவரது முயற்சிக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவை வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.நேபாள பிரதமர் சுசீலா கார்கி உடன் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் சுசீலா கார்கி உடன் ஒரு அன்பான உரையாடல் நிகழ்த்தினேன். சமீபத்திய துயரகரமான உயிர் இழப்புகளுக்கு மனமார்ந்த இரங்கலை தெரிவித்தேன்.
மேலும், நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவரது (பிரதமர் சுசீலா கார்கி) முயற்சிகளுக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கும் என்பதை தெரிவித்தேன்.நாளை நேபாளத்தின் தேசிய தினம் என்பதால் அதை முன்னிட்டு அவருக்கும் நேபாள மக்களுக்கும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். நமது அண்டை நாடான நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் கடந்த 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். இது வன்முறையில் முடிந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 51 பேர் உயிரிழந்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் காத்மாண்டுவில் உள்ள பார்லிமென்ட், தலைமை செயலகம், உச்சநீதிமன்றம், பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் இல்லங்களை சூறையாடினார். நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதன் பின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து அதிபர், ராணுவம், மாணவர் பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.