வீரவநல்லூர்: நெல்லை அருகே தனது சகோதரியுடன் போனில் பேசிய காதலித்து வந்த பிளஸ் 2 மாணவரை அரிவாளால் வெட்டிய 10ம் சகோதரர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாணவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் சக மாணவியிடம் இன்ஸ்டாகிரம் மூலம் பழகி செல்போனில் பேசி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவனும், மாணவியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் சகோதரனான 10ம் வகுப்பு படித்து வந்த மாணவன் உள்பட 5 இளம் சிறார்கள் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை 12ம் வகுப்பு மாணவரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த 12ம் வகுப்பு மாணவனுக்கு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிந்த சேரன்மகாதேவி போலீசார் 5 இளம் சிறார்களை கைது செய்து சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூர்நோக்கி இல்லத்தில் அடைத்தனர். நெல்லையில் காதல் விவகாரத்தில் கடந்த மாதம் 27ம்தேதி ஐடி ஊழியரான கவின் செல்வகணேஷ் காதல் விவகாரத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இச்சூழலில் மீண்டும் இருவேறு சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.