நெல்லையில் ஐ.டி. ஊழியர் ஆணவக்கொலை தமிழகம் முழுவதும் ஆக.17ல் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்: குடும்பத்தினருக்கு கிருஷ்ணசாமி ஆறுதல்
ஏரல்: நெல்லைபாளையங்கோட்டை கேடிசி நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் கடந்த 27ம் தேதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தில் உள்ள கவின் செல்வகணேஷ் வீட்டிற்கு நேற்று முன்தினம் மாலை புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்று, கவின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். கவின் செல்வகணேஷ் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘கவினை தனி ஒருநபராக கொலை செய்திருக்க முடியாது. இதில் சம்மந்தப்பட்ட கூலிப்படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கவின் படுகொலை செய்யப்பட்ட பகுதியில் இன்ஸ்பெக்டராக உள்ள காசிபாண்டியன் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 17ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை புதிய தமிழகம் கட்சி சார்பில் நடத்த உள்ளோம்’’ என்றார்.