Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

2 மகன்களை கழுத்தை இறுக்கி கொன்று தந்தை தற்கொலை: ஓசூரில் பயங்கரம்

ஓசூர்: ஓசூரில் 2 மகன்களை கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கே.சி.நகர், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சிவபூபதி (45). இவரது மனைவி பார்வதி. இவர்களது மகன்கள் நரேந்திர பூபதி (14), லதீஷ் பூபதி (11). ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் இருவரும் முறையே 9ம் வகுப்பும், 7ம் வகுப்பும் படித்து வந்தனர். சிவபூபதி ஆன்லைனில் ஷேர் மார்க்கெட் பிசினஸ் செய்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சிவபூபதிக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் கற்குளம் ஆகும். கடந்த இரண்டரை வருடங்களாக ஓசூரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன், குடும்ப தகராறில் கோபித்துக்கொண்டு பார்வதி தூத்துக்குடி சென்று விட்டார். இதனால் 2 மகன்களுடன் சிவபூபதி வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை சுமார் 6.15 மணியளவில், அகிலா கார்டனில் வசிக்கும் தம்பி சிவபிரகாசுக்கு சிவபூபதி போன் செய்து, `நான் போய் வருகிறேன், இனிமேல் உனக்கு பிரச்னை வராது. பை..பை’ என கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிவபிரகாஷ், மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றபோது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதனால் அவரது வீட்டுக்கு சென்று சென்றார். நீண்டநேரமாக தட்டியும் திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தனர். அங்கு நரேந்திர பூபதி, லதீஷ் பூபதி ஆகியோர் இறந்து கிடந்தனர். மேலும், சிவபூபதி தூக்கில் பிணமாக தொங்கியதும் தெரியவந்தது. தகவலறிந்து அட்கோ போலீசார் 3 பேரின் சடலங்களையும் மீட்டு விசாரித்தனர்.

அதில், நேற்று அதிகாலை 2 மகன்களையும் அடுத்தடுத்து கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்துவிட்டு தம்பிக்கு போன் செய்த சிவபூபதி, காலை 6.15 மணிக்கு மேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், அவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மகன்களை கொன்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

* உருக்கமான கடிதம் சிக்கியது

சிவபூபதி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அதில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், இந்த உலகத்தை விட்டு போகிறேன். நான் போனதற்கு அப்புறம், என் குழந்தைகளை பார்க்க ஆளில்லாததால், என் குழந்தைகளையும் என்னுடன் அழைத்து செல்கிறேன் என உருக்கமாக எழுதியிருந்தார். அதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* பள்ளிக்காக சிவபூபதியின் கடைசி ஆசை

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, குழந்தைகள் பள்ளியில் செய்முறை பயிற்சி எழுத பயன்படுத்தும் ‘சார்ட் பேப்பரில்’ எனது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு, நல்ல உள்ளம் உடையவர்கள் யாராவது காம்பவுண்ட் சுவர் (சுற்றுச்சுவர்) கட்டி கொடுங்க என குறிப்பிட்டு, அதை தனது வயிற்றில் டேப்பால் சுற்றி கொண்டு சிவபூபதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.