நயன்தாராவின் ஆவண படத்தில் இடம்பெற்றுள்ள சந்திரமுகி பட காட்சிகளை நீக்கக்கோரி வழக்கு: தயாரிப்பு நிறுவனம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
சென்னை: நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தை டார்க் ஸ்டூடியோ தயாரித்தது. இந்த ஆவணப்படம் 2024ல் நவம்பர் மாதம் நெட் பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில், அனுமதி பெறாமல், சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டி படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இண்டர்னேஷனல் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரியும், 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் நோட்டீஸ் அனுப்பியும் இன்னும் அவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே, சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். காட்சிகளை நீக்க வேண்டும். ஆவண படத்தின் மூலம் ஈட்டிய லாபக் கணக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டார்க் ஸ்டூடியோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் தரப்பில், பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. வழக்கில் இன்னும் பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் பதில்மனு தாக்கல் செய்யுமாறு டார்க் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு அக்டோபர் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளிவைத்தார்.