Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நயன்தாரா ஆவணப்பட தயாரிப்பு வழக்கில் பதிலளிக்க டார்க் ஸ்டூடியோ நிறுவனத்திற்கு அக்டோபர் 6 வரை அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நயன்தாரா ஆவணப் படத்தில் அனுமதியின்றி சந்திரமுகி படக் காட்சிகளை பயன்படுத்தத் தடை கோரி ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு அக்டோபர் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டார்க் ஸ்டூடியோ நிறுவனம் நடிகை நயன்தாராவின் ஆவணப் படத்தை தயாரித்தது. இந்த ஆவணப்படம் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இதில் தனது வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்திடம் அனுமத்தி பெறாமல் 'நானும் ரவுடி தான்' திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதாக கூறி ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் நயன்தாராவின் ஆவணப் படத்தில் அனுமதி பெறாமல் சந்திரமுகி திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதாக கூறி படத்தின் பதிப்புரிமையை பெற்றுள்ள ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நயன்தாரா ஆவணப் படத்தில் சந்திரமுகி திரைப்படத்தின் காட்சிகளை நீக்கக்கோரியும், ரூ.5கோடி இழப்பீடு கோரியும் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் இன்னும் அவற்றை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணப் படத்தில் சந்திரமுகி திரைப்படத்தின் காட்சிகளை நீக்கக்கோரியும், ஆவணப் படத்தின் மூல ஈட்டிய லாபத்தின் கணக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இந்த பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டார்க் ஸ்டூடியோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக எந்த தகவலும் இல்லை எனவும் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய டார்க் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு அக்டோபர் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.