Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இயற்கை முறையில் இஞ்சி சாகுபடி!

இஞ்சியைப் பயிரிட நிலத்தை முதலில் நன்றாக உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது ஏக்கர் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் தொழுவுரம் பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி இஞ்சி சாகுபடி துவங்குவதற்கு முன்பு 60 முதல் 70 நாட்களுக்கு முன்னர் பலவகை விதைகள் ஏக்கர் ஒன்றுக்கு 30 கிலோ விதைத்து 4 முதல் 5 அடி உயரம் நன்கு வளர்ந்த பயிர்களை மடித்து உழவு செய்வதன் மூலம் நிலத்தின் தன்மை மிக சிறப்பாக உருவாகி விடும். அங்கக பொருட்களின் அளவு எந்த அளவு கூடுதலாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு நிலத்தின் உயிர் இயக்கம் அதிகரிக்கும். இஞ்சி சாகுபடியில் அதன் தரமான விளைச்சலினால் அதில் உள்ள மருத்துவ குணங்களின் அளவு மிகவும் கூடுதலாகவும் இருக்கும். இதற்கு ஆதாரமாக இருப்பது நிலவளமும், நில நலமும் ஆகும். பலவகை விதைகள் என்பது அந்தந்த பகுதிகளில் எளிதாக கிடைக்கக்கூடிய தானிய வகை, பயறு வகை, எண்ணெய் வித்துக்கள் மற்றும் தழைச்சத்து கொடுக்கும் வகைகளின் விதைகள் ஆகும். இவற்றை சேகரித்து விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். ஆக இவை அனைத்தும் கலந்த விதைகள் ஏக்கர் ஒன்றுக்கு 25 கிலோ முதல் 30 கிலோ அளவு பயன்படுத்தலாம்.

பலவகை விதைகள் விதைத்து 30 முதல் 35 நாட்களில் நன்கு அடர்த்தியாக வளர்ந்த நிலையில் நுண் உயிர் கலவை உரம் தயாரித்து பயன்படுத்துவது மிக அவசியமாகும். நன்கு மக்கிய கம்போஸ்ட் அல்லது தொழுஉரம் அல்லது மண்புழு உரம் 70 கிலோ, மரத்தூள் 20 கிலோ, சாம்பல் 10 கிலோ என 100 கிலோ தயாரிக்கவும். இதில் அசோஸ்பைரிலம் 1 கிலோ, ரைசோபியம் 1 கிலோ, பாஸ்போ பாக்டீரியா 1 கிலோ, பொட்டாஷ் பாக்டீரியா 2 கிலோ, வேம் 10 கிலோ, சூடோமோனஸ் 1 கிலோ, வீ.விரிடி 1 கிலோ, வீ.ஹார்சியானம் 1 கிலோ, பேசிலஸ் சப்டிலஸ் 1 கிலோ, பேசிலோ மைசிஸ் 1 கிலோ ஆகியவை மேற்படி கலவை மீது தூவி நன்கு பிரட்டி கலவை தயாரிக்கவும், இந்த கலவையின் மேல் தொல்லுயிர் கரைசல் 10 லிட்டர், அமுத கரைசல் 6 லிட்டர், பஞ்சகவ்யா 7 லிட்டர், மோர் கரைசல் 7 லிட்டர், ஹியூமிக் அமிலம் 1 லிட்டர் ஆகியவை கலந்து கரைசல் தயாரித்து மேற்படி நுண்உயிர் கலவை உரத்தின் மீது தெளித்து நன்கு பிரட்டி கலவை தயாரித்து நிலத்தில் தூவி வாய்க்கால் பாசனம் சொட்டுநீர் தெளிப்பு நீர் பாசனம் செய்ய வேண்டும். அடுத்த 30 நாட்களில் பலவகை பயிர்கள் நன்கு வளர்ந்து வருவதற்கும், நுண்உயிர்கள் மிகுந்த அளவில் பெருக்கம் அடையவும் ஏற்ற சூழல் உருவாகிறது.

பலவகை பயிர்கள் 60 நாட்களில் நன்கு வளர்ந்த நிலையில், ரோட்டவேட்டர் பயன்படுத்தி மடித்து உழவு செய்தால் ஏக்கர் ஒன்றுக்கு 25 டன் தாவரக் கழிவு சேர்க்கப்படுகிறது. பின்னர் 15 செ.மீ உயரம் ஒரு மீட்டர் அகலம் மற்றும் தேவையான அளவு நீளமுள்ள மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். மேட்டுப் பாத்திகள் ஒவ்வொன்றிற்கும் இடையில் 40 செ.மீ இடைவெளி விட்டு அமைக்கவும். விதை இஞ்சி சுமார் 25 முதல் 50 செ.மீ நீளமும், 20 முதல் 25 கிராம் எடையுள்ளதாகவும், அதில் ஒன்று அல்லது இரண்டு முளைப்பு பருக்கள் கொண்ட இஞ்சித் துண்டுகளை வெட்டி எடுத்து விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு 600 முதல் 750 கிலோ விதை இஞ்சி தேவைப்படும். விதைத் துண்டுகளை 100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் மோர்க்கரைசல், 10 லிட்டர் தொல்லுயிர் கரைசல், சூடோமோனஸ் 1 கிலோ அல்லது 500 மிலி கலந்து 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் நடவிற்கு பயன்படுத்த வேண்டும். இது பூசண நோயைக் கட்டுப்படுத்தும். வெர்ட்டி சீலியம் லெகானி 1 கிலோ மற்றும் மெட்டாரைசன் 1 கிலோவை மேற்படி கரைசலில் கலந்து பயன்படுத்துவதன் மூலம் சாறு உறிஞ்சும் பூச்சிகள், செதில் பூச்சிகள் தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம். பின்னர் மேட்டுப் பாத்திகளில் இஞ்சி துண்டுகளை நடவு செய்ய வேண்டும். இறவை சாகுபடியில் வரிசைக்கு வரிசை 40 செ.மீ இடைவெளியும் ஒவ்வொரு வரிசையிலும் 20 முதல் 25 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

(இஞ்சி சாகுபடி குறித்த கூடுதல் விவரங்கள் அடுத்த இதழில் இடம்பெறும்)