Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நேட்டோ, ஜி7 நாடுகள் டிரம்ப் பேச்சை கேட்டு வரி விதித்தால் பதிலடி தரப்படும்; சீனா எச்சரிக்கை

பீஜிங்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்புக்கு செவி சாய்த்தால் எதிர் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஜி7, நேட்டோ நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘ரஷ்யாவிடம் அதிகமான கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 50% முதல் 100% வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் பங்கு வகிப்பதில் சீனாவுக்கு அழுத்தம் தர முடியும்’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜி7 மற்றும் நேட்டோ நாடுகளிடம் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் நேற்று அளித்த பேட்டியில், ‘‘உலகெங்கிலும் உள்ள நாடுகளுடனான சீனாவின் பொருளாதார மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு சட்டப்பூர்வமானது, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. உக்ரைன் போரை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்பதே சீனாவின் மாறாத நிலைப்பாடு. ஆனால், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா விடுத்த அழைப்பு ஒருதலைப்பட்சமானது, வஞ்சிக்கக் கூடியது. இது அமெரிக்காவின் வழக்கமான பொருளாதார வற்புறுத்தல் நடவடிக்கை. இதற்கு செவி சாய்ப்பவர்கள் எதிர் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என கூறி உள்ளார். பொருளாதார, வர்த்தக பிரச்னைகளை தீர்க்க 2வது நாளாக ஸ்பெயினில் சீனா, அமெரிக்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் சீனா இத்தகைய பதிலளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.