தேசிய பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை விட வேறு எதுவும் எங்களுக்கு முக்கியமில்லை: பிரதமர் மோடி பேச்சு
மும்பை: தேசிய பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை விட வேறு எதுவும் எங்களுக்கு முக்கியமில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நவி மும்பையில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ.19,650 கோடி மதிப்பில் நவி மும்பையில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. 1160 ஹெக்டேரில் தாமரை வடிவில் நவி மும்பை விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் மெட்ரோ ரயில் 3-வது வழித்தட சேவையை தொடங்கி வைத்தார்.
ரூ.32,270 கோடி மதிப்பீட்டிலான 33.5 கி.மீ. தூர 3-வது வழித்தட சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. நவி மும்பையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி; மும்பை பொருளாதார தலைநகரம் மட்டுமல்ல, இந்தியாவின் மிகவும் துடிப்பான நகரங்களில் ஒன்றாகும். பயங்கரவாதிகள் மும்பையைத் தாக்கியதற்கு இதுவே காரணம். நவி மும்பை விமான நிலையம் என்பது இந்திய மக்களின் நீண்ட கால கனவு. இது ஆசிய அளவில் மக்களை இணைக்கும் பயனுள்ள பாலமாக இருக்கும். மக்களுக்கு பயணம் எளிதாகும். காங்கிரசின் பலவீனம், பயங்கரவாதிகளை பலப்படுத்தியது.
இந்தத் தவறுக்காக நம் நாடு மீண்டும் மீண்டும் உயிர் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. எங்களை பொறுத்தவரை, தேசிய பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை விட வேறு எதுவும் எங்களுக்கு முக்கியமில்லை. பல பொருட்கள் மலிவு விலையில் கிடைக்க ஜிஎஸ்டி சீர்திருத்தம் வழிவகை செய்துள்ளது. இதனால் இந்த நவராத்திரியில் மக்களின் செலவு விகிதம் உயர்ந்துள்ளது உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்; ஏனெனில் இந்திய பணத்தை நாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம் நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்றும் கூறினார்.