சென்னை: வீட்டு மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய புதிய நடைமுறையை மின்வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக வணிகப் பிரிவு அனைத்து தலைமை பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: விண்ணப்பதார்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்களைக் கேட்பதால் வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய தேவையற்ற கால தாமதம் ஏற்படுகிறது. இப்பணிகளை விரைவுபடுத்தும் வகையில், முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2ஐ, நுகர்வோரிடம் இருந்து பெற வேண்டியதில்லை என அறிவுறுத்தப்படுகிறது.
அதேநேரம் விற்பனை பங்கு பிரித்தல், பரிசளித்தல், போன்றவற்றில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால் விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றையும், ஒப்புதல் கடிதம் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் உயிரிழந்தால், பெயர்மாற்றம் செய்ய வாரிசு சான்றிதழ் அல்லது அண்மைக் காலத்தில் பெறப்பட்ட சொத்து வரி ரசீது மற்றும் இழப்பீடு பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமைப் பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.