Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாமக்கல் அருகே அரசு பள்ளியில் நெகிழ்ச்சி கடிதம் எழுதிய மாணவருடன் கலெக்டர் கலந்துரையாடல்: போட்டி தேர்வை தமிழில் எழுத அறிவுரை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் விஜய், புதிய மாவட்ட கலெக்டராக துர்கா மூர்த்தி பொறுப்பேற்றதையும், கலெக்டராவதற்காக அவர் சந்தித்த சிரமங்கள் குறித்தும், சமூக வலைதளத்தில் படித்துள்ளார். இதனால் பெரிதும் கவரப்பட்ட மாணவர், கலெக்டருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தாங்கள் மாவட்ட கலெக்டர் பணிக்கு எவ்வளவு சிரமப்பட்டு, கடினமாக உழைத்து வந்துள்ளீர்கள் என்பதை அறிந்தேன். நீங்கள் எருமப்பட்டி அரசு பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.

மழைக்காக காத்திருக்கும் பயிர்களைப்போல, உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் என கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, எருமப்பட்டி பகுதிகளில் ஆய்வுப்பணிக்கு சென்ற கலெக்டர் துர்கா மூர்த்தி, மாணவர் விஜய் படிக்கும் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு அவர் தனக்கு கடிதம் எழுதிய மாணவர் விஜய் மற்றும் மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடினார்.

அப்போது, கலெக்டர் துர்கா மூர்த்தி, மாணவர் தனக்கு எழுதிய கடிதத்தை படித்து காண்பித்ததுடன், ‘மழைக்காக காத்திருக்கும் பயிர்களைப்போல உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்,’ என வரியை வாசித்து நெகிழ்ந்தார். அப்போது, போட்டி தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள் என கலெக்டரிடம் மாணவர் விஜய் கேட்டார். இதற்கு கலெக்டர் ஆங்கிலத்தில் எழுதியதாக கூறினார்.

ஏன் தமிழில் எழுத முடியாதா? என மாணவர் விஜய் கேட்டார். இதற்கு கலெக்டர் தாராளமாக தமிழில், நமது தாய் மொழியில் எழுதலாம். நிறைய இந்திய ஆட்சியர் (கலெக்டர்) பணியில் தேர்வு பெற்றவர்கள், தாய் மொழியில் எழுதியுள்ளார்கள். அதிலும் தமிழில் எழுதியவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர் என தெரிவித்தார். தொடர்ந்து கலெக்டர் துர்கா மூர்த்தி, மாணவர்களுடன் கலந்துரையாடி, நீங்கள் விடா முயற்சியுடன் பயின்று, பல்வேறு சாதனையாளர்களாக வர வேண்டும் என அறிவுரை வழங்கினார்.