Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அரண்டு போய் இருக்கின்றார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அரண்டு போய் இருக்கின்றார் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோயிலில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் பங்கேற்கும் 200 மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை வழங்கி, ஆன்மிகப் பயணப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட மூத்தக்குடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடைவீடுகளுக்கு ஆன்மிகப் பயணமாக நான்கு நாட்கள் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்தில் கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்பட்டு சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்படுகிறது. கடந்தாண்டு இத்திட்டத்தில் 2015 பக்தர்கள் பயன்பெற்றனர். இந்தாண்டு ரூ.2.50 கோடி அரசு நிதியில் 2,000 பக்தர்கள் அறுபடைவீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். முதற்கட்டப் பயணத்தை இன்றைய தினம் கந்தக்கோட்டத்தில் 199 பக்தர்களுடன் ஆன்மிகப் பேருந்தை தொடங்கி வைத்தோம். இந்த அரசு பொறுப்பேற்றபின், 3,412 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதத்திற்குள் 4,000 திருகோயில்களை எட்டி வரலாற்று சாதனை படைக்கும்.

முதலமைச்சர் அனுமதியை பெற்று முருகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மருதமலையில் ரூ.110 கோடியில் 204 அடி உயரத்திலும், ஈரோடு மாவட்டம் திண்டலில் ரூ.30 கோடியில் 207 அடி உயரத்திலும், இராணிப்பேட்டை மாவட்டம், குமரகிரியில் ரூ.6.83 கோடியில் 114 அடி உயரத்திலும் முருகன் சிலைகள் நிறுவப்பட உள்ளது. இதுவரை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட 131 முருகன் திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அறுபடை வீடுகள் மற்றும் அறுபடை வீடு அல்லாத முருகன் கோயில்களுக்கு ரூ.1,085.63 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இராமேசுவரம் – காசி ஆன்மிகப் பயணத்தை முதன்முதலில் தொடங்கியதோடு, இதுவரை ரூ. 2.30 கோடி அரசு நிதியில் 920 பக்தர்களும், ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு ரூ.75 இலட்சம் அரசு நிதியில் 3004 பக்தர்களும், புரட்டாசி மாதத்தில் பெருமாள் திருக்கோயில்களுக்கு ரூ.25 இலட்சம் அரசு நிதியில் 1014 பக்தர்களும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆன்மிகத் தலங்களுக்கு சென்று வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை உயர்த்தி தந்த அரசு இந்த அரசாகும். முதலமைச்சர் எண்ணத்தில் உதித்திட்ட இப்படிப்பட்ட புதிய திட்டங்களை செயல்படுத்தி திராவிட மாடல் அரசு ஆன்மிக அரசாக திகழ்ந்து வருகிறது. இதனால்தான் நான்கு முனைகளிலிருந்து இந்த அரசின்மீது தாக்குதல்கள் செலுத்தப்படுகின்றன. அறையில் உட்கார்ந்து கொண்டு சங்கிகள் தீட்டும் திட்டங்களை முறியடிக்கும் வகையில் நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளிலும் இந்து சமய அறநிலையத்துறை தனது நியாயமான வாதத்தை எடுத்து வைத்து வென்று வருகிறது. இதுதொடரும். வரலாறு படைப்போம். இன்றைய தினம் ஆன்மிகப் பயணத்தை தொடங்கியுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை கூட பூஜை செய்ய இயலாத திருக்கோயில்களை கண்டறிந்து ஒருகால பூஜை திட்டத்தில் சேர்த்து அதற்கான வைப்புத் தொகையை ரூ.2.50 இலட்சமாக உயர்த்தி வழங்கி வருவதோடு, அதன் அர்ச்சகர்களுக்கு முதன்முறையாக மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத்தொகையாக வழங்கி வருகிறோம்.

இத்திட்டத்தின்கீழ் 19,000 திருக்கோயில்கள் பயன்பெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் குறித்த கணக்கு வழக்குகள் வெளிப்படை தன்மையாக கையாளப்படுவதோடு, கணினி மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்த முழு விவரத்தை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தினத்தில் அபிடவிட்டாக தாக்கல் செய்வோம். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அரண்டு போய் இருக்கின்றார். இந்த ஆட்சியின் மீது ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி என்ற வலையை வீசலாம் என்று நினைத்தவர்களுக்கு வலையை அறுத்து இது ஆன்மிக ஆட்சி என நிருபித்த பெருமை நமது முதல்வர் அவர்களையே சாரும். கேரள அரசின் அழைப்பை ஏற்று உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டில் கலந்து கொண்டால் அவர்களின் பிம்பம் முழுவதும் இடிந்து தரைமட்டம் ஆகும் என்று பயந்து நயினார் நாகேந்திரன் அறிக்கை விட்டுள்ளார்.

கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் வாசன் முதலமைச்சர் சந்தித்து அழைப்பு விடுத்தபோது ஏற்கனவே திட்டமிட்ட பயணத் திட்டத்தில் மாறுதல் செய்ய இயலாத சூழ்நிலை இருப்பதை தெளிவாக எடுத்துக் கூறினார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் நானும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாநாட்டில் பங்கேற்க உள்ளோம். நயினார் நாகேந்திரனின் பயத்திற்கான முடிவு 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுகின்ற சட்டமன்ற தொகுதியையே திமுக கைப்பற்றும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். திருச்செந்தூர் அர்ச்சகர்களிடம் ஒளிவுமறைவு இல்லாத நிலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கின்ற போது அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறி தீர்ப்பினை பெற்று வருகின்றோம். வெகு விரைவில் ஒழுங்குப்படுத்தி எவ்வித கையூட்டும் இல்லாமல் தரிசனம் செய்கின்ற சூழ்நிலையை நிச்சயம் துறை மேற்கொள்ளும். நடவடிக்கை எடுக்கும்.

ஸ்ரீரங்கம் கோயிலை மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளதை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோயிலானது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அதன் தொன்மையை பாதுகாக்க முடியும். மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் சிறிய மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் என்றாலும், அவர்களை அணுகி அனுமதி பெற்று செய்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையை முதலமைச்சர் அனுமதியை பெற்று துரை வைகோ சந்தித்து கூட்டணி தர்மத்தோடு விளக்கமாக எடுத்துக் கூற உள்ளேன். முதலமைச்சர் இருமொழி கொள்கையில் உறுதியோடு இருப்பவர். எந்த ரூபத்தில் இந்தியை நுழைத்தாலும் எத்தகைய தியாகத்திற்கும் தன்னை ஆட்படுத்தி அதனை எதிப்பதற்கு துணிவோடு களத்தில் இருக்கும் இரும்பு மனிதர்.

எவரும் எந்த மொழியையும் படிக்க கூடாது என்பதல்ல. எந்த மொழியையும் திணிக்க கூடாது என்பதுதான் எங்களது கொள்கையாகும். ஆகவே முதலமைச்சர் எதற்கும் தயங்க மாட்டார். விஜய் இரண்டு மாநாடுகளை முடித்திருக்கின்றார். நரியின் வேசம் கலைந்து போச்சு. டும் டும் டும், இராஜா வேசம் கலைந்து போச்சு. டும் டும் டும், என்பதுபோல் அனைத்து தரப்பினரின் விமர்சனங்களையும் தாங்கி சென்று கொண்டிருக்கிறார். அவர் இன்னும் இரண்டு, மூன்று மாநாடுகள் நடத்தினாலே காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார் என்பதே எனது கருத்தாகும். அவரது உயரம் அவ்வளவுதான். முதலமைச்சர் புகழ்கொடி இமயத்தின் உச்சியில் பறக்கிறது. தாயுமானவரான எங்கள் முதல்வர் இன்றைய தினம் பசியறியா மழலை செல்வங்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்துள்ளார்.

அதில் கலந்து கொண்ட பஞ்சாப் மாநில முதலமைச்சர் பேசுகின்றபோது உடனடியாக தனது அமைச்சரவையை கூட்டி இந்த சிறப்பான திட்டத்தை தங்கள் மாநிலத்திலும் கொண்டு வருவேன் என்று கூறினார். திராவிட மாடல் அரசு தனது திட்டங்களால் ஒன்றியத்திற்கு மட்டுமல்ல உலகத்திற்கே வழிகாட்டுதலாகவும் இருக்கின்றது. .விஜய் சிறுபிள்ளைத்தனமாக பேச்சிற்கு பதில் சொல்லி எங்களது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. 2026 –ல் சட்டமன்ற தேர்தலில் களத்தில் சந்திப்போம், நாங்கள் உறுதியாக 200 தொகுதிகளில் வென்று முதலமைச்சர் கரத்தில் ஒப்படைப்போம் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் சி.பழனி, கோ.செ.மங்கையர்க்கரசி, இணை ஆணையர்கள் கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை, உதவி ஆணையர்கள் க.சிவக்குமார், கி. பாரதிராஜா, கோயில் அறங்காவலர் குழு தலைவர் டி. அசோக்குமார் மற்றும் அறங்காவலர்கள், கோயில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.