*உரங்கள் இருப்பு வைக்க விவசாயிகள் வேண்டுகோள்
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் தண்ணீர் திறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுப்பட்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 24 ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால் இலக்கை தாண்டி 32 ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தற்போது குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறுவை அறுவடை பணிகள் நடந்து முடிந்த இடங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் ஆரகே காக்கழனியில் நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
நெல் விதைகளை வாழை இலையில் வைத்து தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி இயற்கை மற்றும் சூரிய பகவானை வழிப்பட்டனர். விவசாயம் செழிக்கவும், இயற்கை பேரிடர்களில் இருந்து பயிர்களை காப்பற்றவும் வேண்டி கொண்டனர். தொடர்ந்து விதை நெல்லை வயலில் தெளித்தனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ள இந்த மழை மிகவும் உகந்ததாக இருக்கும் என தெரிவித்தனர்.
அதே நேரத்தில் உரம், பூச்சி மருந்து ஆகியவை தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கூறினர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1.56 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி போல் சம்பா சாகுபடியும் இலக்கை தாண்டி சாகுபடி செய்ய விவசாயிகள் முனைப்புடன் செயல்படுகின்றனர்.