Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகையில் 10 நாட்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற மீனவர்கள்: நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் ஆழ்கடல் நோக்கி பயணம்

நாகை: புயல் எச்சரிக்கையால் கடலுக்கு செல்லாமல் இருந்த நாகை, காரைக்கால் மீனவர்கள் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடலுக்கு சென்றார்கள். நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிட்வா புயல் காரணமாக கடுமையான கனமழை கொட்டி தீர்த்தது. அதுமட்டும் இல்லாமல் கடற்கரை பகுதிகளில் தரைக்காற்றின் வேகமானது அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடந்த 24ஆம் தேதி முதல் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இந்த சூழ்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 25 கிராமத்தை சேர்ந்த மீனவர்களும் கடந்த 10 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்கள். குறிப்பாக இரண்டு நாட்களாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை குறைந்ததால் 25 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை முதல் மீன்பிடிக்க கடலுக்கு சென்று கொண்டிருந்தார்கள். குறிப்பாக 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 3,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் அணிவகுத்து கடற்கரை துறைமுகத்தில் இருந்து முகத்துவாசல் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று கொண்டிருக்கிறார்கள்.

இதேபோல் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த காரைக்கால் மேடு, கிழிஞ்சல் மேடு,காசாக்குடி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களும் இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க சென்று இருக்கிறார்கள். 10 நாட்களுக்கு மேலாக வாழ்வாதாரம் முடங்கிய நிலையில் மீண்டும் மீன்கள் அதிகமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடல்மாதவை வணங்கி வழிபட்டு அவர்கள் இன்று காலையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று இருப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.