*கேடயம், ரூ.10 லட்சம் வழங்கிய அமைச்சர்கள்
குத்தாலம் : நச்சினார்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியருக்கு அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நச்சினார்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சி.ராஜ்குமாருக்கு திருச்சியில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் அண்ணா தலைமைத்துவ விருதை வழங்கினர்.
இதுகுறித்து விருது பெற்ற தலைமையாசிரியர் சி.ராஜ்குமார் கூறுகையில் சென்ற கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை, தேர்ச்சி சதவீதம், பள்ளி உட்கட்டமைப்பு, பள்ளி சுகாதார வசதிகள், பள்ளி வளாகம் பாதுகாப்பு நடவடிக்கைகள், அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துதல், மாணவர்களின் அடிப்படை திறன்கள் மாணவர்களின் பன்முகத்திறன் வெளிப்படுத்த அளிக்கப்பட்ட வாய்ப்புகள், மாணவ, மாணவியர்கள் இடைநிற்றலை தவிர்த்தல்,
பள்ளி அலுவலக மேலாண்மை பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக செயல்பாடுகள், பள்ளியின் தனித்துவம் மிக்க சிறப்பான செயல்பாடுகள் இவற்றின் அடிப்படையில் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.
2024-2025ம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா தலைமைத்து விருது கேடயம் மற்றும் ரூ.10 லட்சத்திற்கான காசோலை தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டது.
விருது பெற்று திரும்பிய தலைமை ஆசிரியர் சி.ராஜ்குமாருக்கு மாவட்ட கல்வி அலுவலர் முருகவேல், குத்தாலம் வட்டார கல்வி அலுவலர்கள் குமார், நாகராஜன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.