Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு; தேவநாதன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் உள்ளிட்டோர்க்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனம், நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமைநாதன், தேவசேனாதிபதி, சுதிர் சங்கர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சாலமன் மோகன்தாஸ் தவிர மற்றவர்களை கைது செய்தனர்.

இந்த வழக்கில் சாலமன் மோகன்தாஸ் இதுவரை கைது செய்யபடவில்லை, அவர் தலைமறைவாக உள்ளார். மற்றவர்கள் கைது செய்யபட்டு நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளனர். இவர்களுக்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.பாபு நிதிநிறுவனம் மற்றும் தேவநாதன் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

குற்றபத்திரிகையில் மொத்தம் 1173 பேர் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்து முதிர்வு காலம் முடிவடைந்த பிறகும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து 37 கோடி ருபாய் வழங்காமல் உள்ளது. தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது. விசாரணை முழுமையாக முடிவடையவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தொரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை முழுமையாக நிறைவடைந்த பிறகு கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.