மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் குருபூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
விழாவில் இன்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெற உள்ளது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
இதற்காக அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் கமுதியில் இருந்து பசும்பொன் கிராமம் வரையிலும் 4300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 2 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் ஒரு டி.ஐ.ஜி., 20 சூப்பிரண்டுகள், 27 கூடுதல் சூப்பிரண்டுகள் உள்பட மாவட்டம் முழுவதும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவர் ஜெயந்தியை ஒட்டி மதுரையில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக செல்ல அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முத்துராமலிங்கத் தேவரின், 118வது ஜெயந்தி மற்றும் 63ம் ஆண்டு குருபூஜையையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மருது பாண்டியர்களின் 224வது குருபூஜை விழாவை ஒட்டி, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
