Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பரமத்தி வேலூர் அருகே நகை-பணத்திற்காக தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்

பரமத்தி வேலூர்: பரமத்தி வேலூர் அருகே நகை-பணத்திற்காக தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் சரமாரி குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராசப்பன். இவரது மனைவி சாமியாத்தாள் (67). இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி கோவையில் குடும்பத்துடன் தங்கி ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மகள் கிருஷ்ணவேணிக்கு திருமணமாகி மணியனூரில் உள்ளார். ராசப்பன், கடந்த 30 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். குளத்துப்பாளையத்தில் உள்ள நிலத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டு சாமியாத்தாள் மட்டும் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்துள்ளார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு இரவு 9 மணிக்கு மேல் வீடு திரும்பினார். வீட்டு வாசலில் கட்டில் போட்டு படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், சாமியாத்தாளை தட்டி எழுப்பி கத்தியை காட்டி வீட்டைத் திறந்து நகை -பணத்தை எடுத்துக் கொடுக்கும்படி மிரட்டியுள்ளனர்.

பயந்து போன சாமியாத்தாள் கூச்சலிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், சாமியாத்தாள் கழுத்து மற்றும் வாய் பகுதியில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சாமியாத்தாள், செல்போன் மூலம் பக்கத்தில் உள்ள உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார். உடனே, அவர்கள் சாமியாத்தாளை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சேலம் சரக டிஐஜி உமா, எஸ்.பி. ராஜேஷ்கண்ணா ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து, தோட்டத்து வீட்டிற்கு செல்லும் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.