மும்பை: மும்பையில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி பச்சிம் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 12925) நேற்று காலை 11.30 மணியளவில் புறப்பட்டது. அந்த ரயில் போரிவிலியை கடந்து மதியம் 1.19 மணியளவில் வான்காவ்–தகானு ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, திடீரென ரயிலின் கடைசி 2 பெட்டிகளின் இணைப்பு உடைந்தது. இதனால் 2 பெட்டிகள் தனியாக கழன்று சென்றன. அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர்.
தகவல் அறிந்த எஞ்சின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார். தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, ரயிலில் இருந்து பிரிந்த பெட்டிகளை மீண்டும் இணைத்தனர். பெட்டிகள் இணைக்கப்பட்ட பின்னர், சுமார் அரை மணி நேரம் கழித்து எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து புறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதியம் 2.10 மணியளவில், ரயில் வாபி அருகே சஞ்சன் ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, அந்த 2 பெட்டிகள் மீண்டும் கழன்று சென்றன. இதனால் பயணிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் நிறுத்தப்பட்டது. ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு பணிகள் முடிந்ததையடுத்து, அந்த ரயில் அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்டது. 2 முறை ரயில் பெட்டிகள் பிரிந்ததால் சுமார் 3 மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும், ரயில் பெட்டிகள் 2 முறை கழன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.