Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மும்பையில், புறாக்களுக்கு உணவளிக்க தடை விதித்த ஐகோர்ட் உத்தரவில் தலையிட முடியாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

டெல்லி : மும்பையில், புறாக்களுக்கு உணவளிக்க தடை விதித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியா, தாதர் உள்ளிட்ட இடங்களில் புறாக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. இந்த இடங்கள், 'கபூதர்கானா' என அழைக்கப் படுகின்றன. திறந்தவெளியில் புறாக்களுக்கு உணவளிப்பதால் அப்பகுதியை சுற்றி வசிப்போருக்கு நுரையீரலை பாதிக்கும், 'ஹைப்பர்சென்சிட்டிவ் நிமோனியா' தொற்று அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது, புறாக்களுடன் தொடர்பில் இருப்பதால் ஏற்படுவதாகவும், ஏற்கனவே உடல் உபாதைகள் உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 60- 65 சதவீதம் அதிகம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதைத்தொடர்ந்து மும்பையில் உள்ள, 51 'கபூதர்கானாஸ்'களை மூட மஹாராஷ்டிர அரசு மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.மும்பை மாநகராட்சி, உணவளிக்க தடை விதித்ததுடன், உணவளிக்கும் இடங்களை இடிக்கவும் முடிவு செய்தது.

இதற்கு எதிராக, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், உணவளிக்கும் இடங்களை இடிப்பதற்கு தடை விதித்தது. அதே சமயம், புறாக்களுக்கு உணவளிக்கவும், மீறுவோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம்' எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.